Monday, 13th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஆவடி: சென்னை வெளிவட்ட சாலையான வண்டலூர்- மீஞ்சூர் 400 அடி தேசிய நெடுஞ்சாலைக்காக வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் ஆவடி பட்டாபிராம் அருகே சாஸ்திரி நகரில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன.
பின்னர் அவர்களுக்கு மாற்றாக ஆவடி அடுத்த மோரை கிராமம் ஜே.ஜே.நகரில் நிலம் வழங்கப்பட்டது.இதனை அடுத்து வீடுகள் இழந்த சுமார் 97 குடும்பங்கள் அங்கு வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். நிலம் வழங்கி 4 ஆண்டுகள் ஆகியும் மின் இணைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.
இதனால் இந்த பகுதி மக்கள் இரவு நேரங்களில் மாணவர்கள் படிக்க முடியாமல் போவதுடன் கொசுக்கடி,பூச்சுத் தொல்லை சிக்கி தவித்து வருகின்றனர். இது குறித்து பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கவுரி சங்கர் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் ஆவடி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில தனி செயலாளர் இளம்சேகுவேரா கண்டன உரையாற்றினார்.
வில்லிவாக்கம் ஒன்றிய வடக்கு பகுதி செயலாளர் ஆசீர்வாதம் கிமு திராவிட மணி ஆவடி ஆதவன் முல்லை தமிழன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.உடனடியாக மாவட்டம் நிர்வாகம் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து கோரிக்கை மனுவை ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் வழங்கினர்.